Thursday, November 19, 2009

முல்லைஅமுதன்

ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.

ஈழத்தின் கல்வி,மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி, தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆக்கிரமிப்பு, இயல்பாகவே நடைமுறை வாழ்வியலின் ஏதுநிலை என நமது பெண் படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.

ஆமை நகர்வது போலவே பெண் படைப்பாளர்களின் வருகை 80 இற்குப் பிறகு நிகழ்ந்த அதிசயம் அதிக பெண் படைப்பாளர்களின் படைப்புக்களை நாம் படிக்க வாய்ப்பாகியது. மீனாட்சி நடேசையர் ,கோகிலம் சுப்பையா, குறமகள், பவானி ஆழ்வாப்பிள்ளை, யாழ்நங்கை, குந்தவை, கோகிலா மகேந்திரன், மண்டூர். அசோகா, நயீமா சித்தீக், தாமரைச்செல்வி... எனத் தொடங்கி சந்திரவதனா ,சந்திரா ரவீந்திரன் வரை நீள்கிறது. உள்ளக, வெளியக இடப்பெயர்வுகள் இவர்களது புதிய சிந்தனை விரிவாக்கத்துக்கு உதவியது. 83இற்கு பின்னரான இனக்கலவரம்,போராட்ட உணர்வு அல்லது போருக்குள் வாழ்கின்ற சூழல் இவர்களையும் ஆகர்சித்ததில் வியப்பில்லை.

இங்கு சந்திரவதனாவின் தாய்-தந்தையரின் அறிவூட்டல் இவருக்குள் ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கலாம். சூழலை அனுபவித்து, வாழ்க்கையை சரிவர உள்வாங்கி அதனை படைப்பில் தந்திருப்பது உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். எழுத்தும் வாழ்வும் ஒன்றாகி இவர் தருகின்ற பதிவுகள் சமூக வட்டத்தின் வரம்புகளை மீறாமல் வார்த்தைகள் சிதறாமல் எங்களுக்கு தந்த ‘மனஒசை’ இல் சிறப்பான சிறுகதைகளை வாசிக்க முடிந்திருக்கிறது. ஏற்கனவே ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வாசித்த உணர்வு இன்றும் என்னுள் ஞாபக விதைகளை விதைத்ததை உணரமுடிகிறது. என் தந்தையுடன் அவர் மாற்றலாகி சென்ற இடங்களில் நானும் என் தங்கைகளும் சிறு சிறு அசைவுகளையும்/ அமைவுகளையும் அனுபவித்து நுகர்ந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க வைத்த கதைகள் அனேகம். ஒவ்வொரு கதைகளை வாசிக்கும் போதும் என்னுள் எழுகின்ற உணர்வு என் வாழ்வின் கதைகளைப் போலுள்ளதாக உணர்கையில் எல்லா யாழ்ப்பணத்துக் கிராமங்களின் கதைகளே என உணர்த்தப்படுவது புரிகிறது. பருத்தித்துறை தொடங்கி நாகொல்லாகம ஊடாக ஜெர்மனி வரை தொடர்கிறது. பழகிய பாத்திரங்கள், ஊர்த் திருவிழா ஞாபகங்கள் வித்தியாசமான சிந்தனை, வார்த்தைகளை லாவகப்படுத்தும் திறமை இவருக்கு எல்லாமே கைகொடுத்திருக்கிறது. இதுவரை வாசித்த கதைகளூடாக நம்பிக்கையும், ஆரோக்கியமாகவும் ஈழத்து பெண் படைப்பாளர்கள் எழுதுகிறார்கள். இங்கு இவரும் அப்படியே. மொழிக்கு முழு உரிமையும் எழுத்தில் தந்திருக்கிறார். வாய்மொழிச் சொற்கள் ஆளுமையுடன் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. கனவு/கனவு காத்த வாழ்வு.. அது தருகின்ற சோகம் /வலிகள் என் போன்ற வாசகர்களை உள்வாங்குகின்ற நிகழ்வு நடந்திருக்கிறது.

இன்றைய பெண்களின் பெண்ணியம் சார்ந்த தவறான சிந்தனைகள் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டு. எனினும் வரம்புகள் மீறாமல் எழுதியது ஆறுதலைத் தந்துள்ளது.

ரயில் பயணம் அலாதியானது. அன்றைய யாழ்ப்பாணத்து யாழ்தேவி / மெயில் ரயில் பயணம் சுவாரஷ்யம் நிறைந்தது. வழியில் தெரிகின்ற மரங்கள், மனிதர்கள், தரித்து நிற்கிற போது வந்து முண்டியடித்த படி ஏறுகிற வியபாரிகள்/பயணிகள், சுதந்திரமாக பத்திரிகையை விரித்தபடி தூங்குகிற மனிதர்கள் அவ் அனுபவம் இப்போது இல்லை. ஐ டி கேட்டு பயமுறுத்தும் இராணுவம், ஆங்கங்கே பதிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.. இப்படி நிறைய அனுபவ வெளிப்பாடுகள் கதைகள் நம்மை உலுக்கிப் பார்க்கின்றன. சுதந்திரமாக எதுவும் இல்லைதான். முன்னால் நகர்கிற எதுவும் நீ அன்னியன் என்பதை சொல்லாமல் சொல்லுகிற செய்திகள்.

மனிதர்களால் நிச்சயிக்கப்பட்டு இணைகிற மனங்களுள் எழுகின்ற விரிசல்கள் ஒரு பேதையை மரணிக்க வைக்கிறது ‘வேஷங்கள்’ இல். புலம்பெயர் சூழலில் இயல்பாகவே ஆகிவிட்ட உறவுப் பிறழ்வு உமா மூலம் சாட்சியமாக்கப் பட்டுள்ளது.

சின்னச் சின்ன அனுபவ வெளிப்பாடுகளை, சில பயணங்களில் ஏற்படுகின்ற எரிச்சலூட்டுகிற சம்பவங்களை கோகிலா என்ற பாத்திரத்தின் மூலம் ‘பயணம்’கதையில் சொல்கிறார்.

‘கண்டவற்றை நாளும் கனவிற் …திண்டிறலிற் கென்னோ…’ திருவருட்பயன் தருகின்றதாயினும் உண்மையே. கண்முன்னே நிகழ்ந்த சம்பவங்களையே மனதிருத்தி எழுத்தில் தந்து எம்மைத் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இன்றைய பெண் படைப்பாளர்களின் சிந்தனை விரிவு பட்டிருக்கிறது. அனுபவம் என்பதே நேரடி/பிறரின் என வகைப்படுத்துகையில் இங்கு சந்திரவதனா தன் அனுபவங்களை ஆழமாக உள்வாங்கியிருப்பது சிறப்பைத் தருகிறது.

பெண் என்பவளே மென்மையானவள் தான். அந்த பெண்மையிலும் சீரிய சிந்தனைகள் பூக்கும் தான். இங்கு சிறுகதைகளாய்ப் பூத்திருகிறது.

தேனீர் குடிக்க வரச் சொல்லுகிறவனிடம் நாசூக்காய் நழுவுகின்ற கோகிலாவின் சாமர்த்தியம் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் அனுபவ வாயிலாகப் பெற்றிருக்கிறார்கள். ஊரில் ஊசியும், கொஞ்சம் மிளகாய்த் தூளும் அவர்களின் கைப் பையில் கொண்டு செல்லும் நம் ஊர் பெண்களை நினைத்துப் பார்கிறேன். இங்கு வாழ வேண்டிய சூழலில் தம்மை பழக்கப் படுத்திக் கொண்டுள்ளார்கள்.

உயரத்தில் இருந்து வீழ்ந்து மரணிக்கும் பெண்ணிலிருந்து பிற கதைகள் மாறினாலும் ஒரு மையப் புள்ளிக்கே வந்து நிற்கிறார்கள்.

பெண்ணின் மன வலி அவளுக்குத் தான் தெரியும். முகம் தெரியா ஆணுக்கு மாலை இடுவதும் அவனின் எல்லா சுகங்களுக்கும் / துக்கங்களுக்கும் அனுசரித்துப் போகின்றவளாக, விட்டுக்கொடுத்தபடி யாரோ வகுத்த சமூக வட்டத்துள்ளிலிருந்து வெளி வரமுடியாமல் தவிக்கின்ற பெண்ணின் மன நிலைக்கேற்றவாறு, ஊர் மாதிரி அம்மா வீட்டுக்கு பொதிகளுடன் வந்து இறங்காமல் தன் முடிவை தானே எடுக்கின்றவளாகவும், மகனுக்காக வாழ முடிவெடுக்கிறவளாகவும், முகம் தெரியாத ஊரில் யாரோ பொருத்தம் பார்த்து பார்சல் மனைவியாக வந்த ஒருத்தியின் வாழ்நிலை சிதறுகிற நிலையிலும் நிதானமாக முடிவெடுத்த பெண்ணின் மன உளைச்சல் அழகாக படம் பிடித்துக் காட்டப் பட்டிருக்கிறது. சங்கர்- கோகுல்- இந்து மூன்று பாத்திரங்களூடாக நம்மையும் நிமிர வைக்கிறார்.

ஊரின் நிகழ்வுகளுக்குள்/ இராணுவக் கெடுபிடிகள், இதர அச்சுறுத்தல்கள் இவற்றுக்குள் மத்தியில் தன் அக்கா பேசிய மாப்பிள்ளையுடன் வந்த சங்கவிக்கு தன் கணவன் சேகரின் இன்னொரு பக்கம் தெரிய வர, முதலில் தன்னைத் தானே சிறைப்படுத்தி வாழுதலில் இருந்து நிதானமாக தன் நாளை தீர்மானிக்கிறவளாக சங்கவி மாறுகையில் வரம்புகளை உடைக்க வைக்கிற சிந்தனை தெளிவு படைப்பாளரிடம் நிறையவே தெரிகிறது. வர்ணனைகள் அளவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு சேதியாக இளமையான புகைப்படங்களூடாக பெண்ணையும் அவள் சார்ந்த உறவுகளையும் ஏமாற்றுகிறதாக சேகர் பாத்திரமூடாக கோடிட்டுக் காட்டுகிறார். நிறைய கனவுகளுடன் வருகின்றவள் தன் வாழ்வு பற்றிய கனவுகள் உடைகையில் சீற்றம் கொள்வதை அழகாக புரியவைக்கிறார்.

தங்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த தாய் தந்தையரை புலம்பெயர் தேசத்துக்கு அழைத்து வந்து விட்டு அவர்களின் சுகதுக்கங்களை மறந்து உபகாரப்பணத்துக்காக வருத்துகின்ற கொடுமைகள் சோகம் தருகிறது. பாத்திரங்களை உள்வாங்குகிற அனுபவங்கள் அதை எழுத்தில் தருகிற ஆற்றல் எம்மை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. மொழியைக் கைக்குள் அடக்குகின்ற வல்லமை எதிர்கால சிற்பியின் இன்றைய தரிசனம் நமக்கு ‘மனஒசை’யைத் தந்துள்ளது.

கிராமத்து வாழ்நிலை/ போர்ச்சூழல்/ இந்திய-இலங்கை இராணுவ அடக்குமுறைகளால் சிதிலமாகிப்போன நிலையில் புலம்பெயர் தேசத்துச் சூழல் மாற்றத்தால் மனித மனங்களும் எப்படி மாறுகிறது என்பதும், தான் தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று வந்துவிட தாய் நாட்டை, தன் கலாச்சாரதை மறந்து வாழ்கிற மனிதர்கள்… புலம்பெயர் தேசத்து வாழ்க்கைக்கு அனுசரித்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஒரு பெண்ணை/படைப்பாளியை பாதித்திருக்கிறது. நம் முன்னே உலாவும் பாத்திரங்களையே நமக்கு படிக்க தந்திருகிறார். எழுத்தில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

நூலில் அச்சுப்பிழைகளைக் காணமுடியவில்லை. குமரன் பதிப்பகத்தாரின் அச்சும் அழகு சேர்க்கிறது.

முப்பது கதைகளூடு நம்மைப் போலவே நிறைய அனுபவங்களைப் பெற்றிருப்பார். ஆதலால் அவரிடமிருந்து இன்னொரு மனஒசையை எதிர்பார்க்கிறோம்.

முல்லைஅமுதன்
லண்டன்
Quelle - Tamilvisai

Monday, December 22, 2008

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.

சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.

மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.

ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரவதனாவும் அத்தகையவர்தான். 'எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத பொழுதுகளை எனது எழுத்துகளாற்றான் தேற்றியிருக்கிறேன்.' என அவரே தனது முன்னுரையில் சொல்கிறார். துன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் அதன் சுமையைக் குறைக்கிறார். மகிழ்ச்சியான கணங்களை பிட்டுத் தருகிறார்.

சந்திரவதனாவின் படைப்புலகம் எளிமையானது, அதன் நிகழ்வுகள் வாழ்வோடு ஒன்றியது. நாளந்தம் தம் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் அவரின் மனத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை கற்பனை மெருகூட்டாது, அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, நாகொல்லாகம், வவுனியா, மொஸ்கோ, ஜேர்மன், லண்டன், கனடா எனப் பயணப்பட்டுத் தேடப்பட்டு அவரது ஆழ்மனத்தில் உறைந்திருந்து மீட்கப்பட்ட புதையல்கள்தான் 'மனஓசை' என்ற சிறுகதைத் தொகுப்பு.

அங்கெல்லாம் சந்திக்கும் மக்களது, முக்கியமாக தமிழர் வாழ்வினைப் பதிவு செய்கிறது. ஆய்வாளனாக, சமூகவியலாளனாக, விஞ்ஞானியாக மனிதவாழ்வை சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கி பிய்த்துப் பார்க்கும் பார்வை அல்ல. ஒரு குடும்பப் பெண்ணின் பார்வை இது. அவளின் உள்ளுர் வாழ்வின் நினைவுகளையும், அதன் எதிர்மறையான புலம்பெயர் வாழ்வின் கோலங்களையும் தெளித்துச் செல்கிறது.

ஆத்தியடி வீட்டில் இருக்கும் பிச்சிப் பூவின் மணத்தில் கிறங்கும் அதே மனம் ஜேர்மனியின் பனியில் உறைந்த மரங்களிலும் லயிக்கிறது.

'காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் இருந்த காசல் நட்ஸ் மரம்';. பின்னர் 'இலைகள் மஞ்சளாகி ... இலைகளே இல்லாமல் மொட்டையாகி,' பின் 'பனியால் மூடப்பட்டு ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து பரந்து அழகாக....' என்கிறர் ஓரிடத்தில்.

ஆம் அவருக்கு வாழ்வை ரசிக்கத் தெரிகிறது. மனசு பூரித்து போதையாக நிறைந்து வழிகிற நேரங்களில் மட்டுமின்றி மனசுக்குள் சோகம் சுமையாக அழுத்தி துயர் சொரியக் கரையும் கணங்களிலும் கூட இயற்கையின் மேலான வாஞ்சையை, மனித உறவுகள் மீதான அக்கறையையும் பரிவையும் அவரில் காண முடிகிறது. இந்த வாலாயம் அனைவருக்கும் கை கூடுவது அல்ல.

யாழ்ப்பாணச் சமூகம் எவ்வளவு தூரம் தாங்க முடியாத சுமைகளையும் சுமந்த போதும் அவ்வளவு தூரம் அதிலிருந்து மீண்டு வாழவும் செய்கிறது.

தந்தையை இழந்தவர் எத்தனை பேர்?

தாயை, சகோதரங்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை என எவர் ஒருவரையாவது இழக்காதவர் அம் மண்ணில் இருக்கிறார்களா?.

அங்கங்களை இழத்தல், வீட்டை இழத்தல், தொழில் இழத்தல் என மற்றொரு பக்கம்.

அதற்கு மேலாக தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்போது? தாய் மண்ணிலிருந்து பிரிந்தேனும் புதுவாழ்வு பெற விழைகிறது.

அதற்காக அச் சமூகம் கொடுத்த, கொடுக்கிற விலை என்ன? 'சொல்லிச் சென்றவள்' சிறுகதை முதல் சந்திராவின் அனுபங்களாக விரியும் பக்கங்களுக்கு ஊடாக பயணப்படும்போது அந்தத் துயரங்களில் மூழ்கித் திணறும் நிலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படவே செய்யும்.

காதல் கல்யாணமே இன்றைய யதார்த்தம்.
உலகம் அதற்கு மேலும் சென்று விட்டது.

கல்யாணமின்றி சேர்ந்து வாழ்வதும், திருமணமாகாமலே குழந்தைகள் பெறுவதும், விரும்பங்கள் மாறினால் கட்டியவனை அல்லது கட்டியவளை பிரிந்து செல்வதும், ஒற்றைப் பெற்றாருடன் குழந்தைகள் வாழ்வதும் இன்று மேலைத் தேச வாழ்வுக்கு அன்னியமான செயற்பாடுகள் அல்ல.

இவ்வாறு இருக்கையில் 'புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எங்கோ வாழும் ஒருவனுக்கு மனைவியாவதற்கு தயாராவதும், ..... கண்ணாலே காணதவனை நம்பி வெளிநாட்டுக்கு ஏறிப் போக அங்கு அவன் சட்டப்படி கலியாணம் செய்யாது அல்லாட வைப்பதும், திருப்பி அனுப்ப முனைய அவள் நிரக்கதியாவதும் இப்படி எத்தனையோ அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறார்.

'பாதை எங்கே', 'விழிப்பு', 'வேசங்கள்', போன்றவை அத்தகைய படைப்புகள்.

'புலம் பெயர் வாழ்வின் பெண்கள் சார்ந்த அவலங்களை இவ்வளவு ஆழமாகப் பதிவு யாரும் பதிவு செய்யவில்லை' என்ற கருத்துப்பட இராஜன் முருகவேள் கூறியிருப்பதுடன் நானும் ஓம் படுகிறேன்.

அதே நேரத்தில் புலம் பெயர் வாழ்வின் இன்னொரு பக்கமாக, 'தீரக்கதரிசனம்' கதையில் வரும் ஒரு வயதான பாட்டாவின் வாழ்வில் மூழ்கும்போது எம் மனமும் கனடாவின் பனிபோல உறைந்து விடுகிறது.

'தாங்கள் காலமை வேலைக்குப் போற பொழுது தகப்பனை வெளியிலை விட்டு கதவைப் பூட்டிப் போட்டு போயிடுவினம்' மத்தியானம் சாப்பிடுறது, ரொயிலட்றுக்கு போறது எல்லாம் அவர்கள் வந்தாப் போலைதானாம்.

வீதியோரக் கல்லில் பனியில் உறைந்து, பசியில் துவண்டு, பேசுவதற்கும் ஆள் இன்றி ஒரு பிச்சைக்காரனைப் போல பரிதாபமாக அமர்ந்திருந்த யாரோ ஒரு பாட்டாவைப் பற்றிய தகவல் இது.

'அப்ப அவர் ஏன் இங்கை இருக்கிறார். நாட்டுக்குப் போகலாம்தானே' கதாசிரியர், கூட வந்த பிள்ளையிடம் கேட்கிறார்.

'அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகிதில்லோ'.

'சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பதாக' கதாசிரியர் கூறுகிறார்.

'வீட்டு காவல் நாய்கள் போல இருக்கிறம்' என அவுஸ்திரேலியா சென்ற ஒரு முதியவர் என்னிடம் முன்னொரு போது கூறியபோது மனம் வருந்தினேன்.

இவை யாவும் வெறும் கொடுமை அல்ல. பணத்தின் முன், சொகுசு வாழ்க்கைக்கு முன் மனித உணர்வுகளே இவர்களுக்கு மரணித்துவிட்டதன் வெளிப்பாடு.

நெஞ்சை உலுக்கும் நிலை இது.

பெண்ணியம் அவரது படைப்புகளில் கருத்துநிலை வாதமாகத் துருத்திக் கொண்டு நிற்பதில்லை. முக்கியமாக ஜேர்மனி நாட்டில் சில தமிழ்ப் பெண்கள் படும் அவலங்களை மிகவும் யாதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்.

'தாலியை நிதானமாகக் கழற்றி வைக்கும்' 'விலங்குடைப்போம்' கதையின் சங்கவி,

'என்னோடை ஒரு நாள் கோப்பி குடிக்க வருவியோ' என்ற கேள்வியோடு அதற்கு மேலானா சம்மதத்தைத் தேடும் ஆபிரிக்காரனை உறுதியோடு மறுக்கும் 'பயணம்' கதையின் கோகிலா ஆகியோர் சற்றுத் துணிச்சல்காரர்கள்.

ஆனால் அதே நேரம் 'என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?', 'ஏன்தான் பெண்ணாய்' போன்ற கதைகளில் வரும் பெண்கள் சாந்தமானவர்கள்.

குடும்ப வாழ்வில் தாம் தினசரி அடக்கப்பட்போதும் அதிலிருந்து வெளி வராமல் பொறுத்துக் கொள்ளும் பேதைகள். தங்களை மட்டும் யோசிக்காது குழந்தைகளையும் குடும்பத்தையும் நினைத்துப் அடங்கிப் போகும் அப்பாவிகள்.

உண்மையில் இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதுதான்.

கதைகளைப் படித்துவிட்டு உங்கள் வீட்டையும் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

'டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து ...' என ஆரம்பிக்கும் இந் நூலின் தலைப்புக் கதையான பொட்டு கிளாஸ் சாதீயம் பற்றியது. தாழ்த்ப்பட்ட சாதியினர் மீதான உயர்சாதிப் பெண்ணின் பரிவை எடுத்துச் சொல்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன், மற்றும் அவரது சகோதரி சந்திரா ரவீந்திரன் ஆகியோரை 80களின் ஆரம்பத்திலிருந்து அறிந்திருக்கிறேன். இவரது உலகின் ஒரு பகுதி எனது உலகமும் கூட.

அவரது வீடு எனது பருத்தித்துறை டிஸ்பென்சரியிலிருந்து எனது சொந்த ஊரான வியாபாரிமூலைக்கு போகும் பாதையில் இருக்கிறது.

அவரது படைப்புகளில் வரும் பாத்திரங்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எனக்கும் பழக்கமானவர்களே.

ஏனைய பல பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர்களே.

பல நிகழ்வுகளும் எனக்கும் அன்னியமானவை அல்ல.

இதனால் இவரது இந்த நூலைப் படிக்கும்போது அக் காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை மீள அசைபோடும் வாய்ப்பு கிட்டியது.

ஆத்தியடி பிள்ளையார் கோவில், நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில்.இவ்வாறு எவ்வளவோ!

நினைக்கும்போது எவ்வாறு எமது வாழ்வு சிதைந்து விட்டது. வாலறுந்த பட்டமாக, வேரறுந்த மரமாக அல்லாடுகிறோம் என்பது மனத்தை உறுத்துகிறது.

அவரது 'மன ஓசை' என்னையும் அல்லற்படுத்துகிறது.

யாழ் மண்ணோடு உறவு கொண்ட அனைவரையும் அவ்வாறே அல்லற்படுத்தும் என்பது நிச்சயம்.

சந்திரவதனா செல்வகுமாரன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமானவர். பல இணைய இதழ்களில் அவரது பல படைப்புகள் வெளியாகின்றன. தனக்கென பல வலைப்பதிவுகளையும் வைத்திருக்கிறார்.

மேலும் பிரகாசமான படைப்புலகம் அவர் பேனாவிலிருந்து ஊற்றெடுக்கக் காத்திருக்கிறது எனலாம்.

முப்பது கதைகளை அடக்கி 195 பக்கங்கள் நீளும் இத் தொகுப்பை குமரன் பிரின்ரேர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்- 14.12.2008
நன்றி:- எம்.கே.முருகானந்தன்

பதிவுகள்

பதிவுகள் வ. ந. கிரிதரன்

Thursday, July 17, 2008

இராஜன் முருகவேல்

திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களது முப்பது சிறுகதைகளை உள்ளடக்கிய நூல். மூனா அவர்களது முகப்போவியத்துடன் 196 பக்கங்களில் மிகவும் நேர்த்தியாக, ஆவணி 2007ல் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு.

இந்நூலிலே உள்ள சிறுகதைகள் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களது வாழ்வுடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகளின் பதிவுகள். அவர் அனுபவித்த உணர்வுத் தெறிப்புகளின் உக்கிரத்தில் எழுத்துக்களாக வெடித்துத் தெறித்த உணர்ச்சிப் பிரவாகங்கள் அல்லது தாங்க முடியாத உணர்வுகளின் வடிகால்கள்.

இந்நூலிலே, எழுத்தாளரே, 'தனது துயரத்தின் வடிகால்களாகவும், சில விடயங்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட கோபத்தின் தெறிப்புகளாயும், வர்க்க பேத எதிர்ப்புக்களாயும், மறுப்புக்களாயும், இயலாமையின் சொரிவுகளாயும், சந்தோசத்தின் படிவுகளாயும் வெளிப்பட்ட கோலங்களே இத்தொகுப்பிலுள்ள ஆக்கங்கள்' என்கிறார். இவை வெறும் கதைகளல்ல, தன்னைச் சுற்றியுள்ள எதார்த்தங்கள் என்றும் கூறுகிறார்.

உண்மைதான். இக் கதைகளை வாசிக்கும் போது.. இவை கதைகளல்ல என்ற உணர்வு எழுவதை என்னால் மறுக்க முடியவில்லை. அதேபோல ஒவ்வொரு வாசகனையும் இவ்வித உணர்வு ஆட்கொள்ளும் என்பது எனது எதிர்பார்ப்பு.

திருமதி சந்திரவதனா செல்வகுமாரனின் எழுத்துகளை அவ்வப்போது யேர்மனியில் இருந்து வெளிவரும் இனிய தமிழ் ஏடான பூவரசு சஞ்சிகை மூலம் வாசித்திருந்தாலும், அவரது பல ஆக்கங்களை இணையத்தளங்களின் வாயிலாகவே என்னால் அறிந்து வாசிக்க முடிந்தது. அதன் பயனாக, அவரது அனுமதியுடன் இருபத்தைந்து ஆக்கங்களை 'பதியப்படாத பதிவுகள்‘ எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக்கி, 'தமிழமுதம்‘ எனும் இணையத் தளத்தில் 30.10.2004 அன்று வெளியிட்டேன். அந்த இருபத்தைந்து ஆக்கங்களையும் மின்னூலுக்காக தட்டச்சு செய்யும்போது.. அவற்றை எழுத்துக்களாக வாசித்தேன். அப்போது அந்த ஆக்கங்களின் உணர்வுகளை உணர முடிந்தது.. அதனுள் அமிழ முடிந்தது.. இப்படியுமா எனவ அதிரவும் முடிந்தது.

திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் எழுத்துக்களுடன் நின்றுவிடவில்லை. தமிழில் 'வலைப்பூ‘ என அழைக்கப்படும் 'புளொக்‘கில் 20க்கும் மேற்பட்ட பக்கங்களை வைத்து விடாமுயற்சியுடன் இணையத் தமிழுக்கும் தனது சீரிய பங்களிப்பைச் செலுத்தி வருபவர்.

வாழ்வில் நிகழ்ந்த ஆறாத மனத் தழும்புகளை பல சிறுகதைகளாக எழுதும் ஆற்றல் நிறைந்த திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் முப்பது மனத் தழும்புகள் அல்லது மனை அதிர்வுகள் இங்கே முப்பது கதைகளாக, மன ஓசை என்னும் நூலாக உங்கள் முன்னே எழுந்து நிற்கின்றன.

இக்கதைகள் பலவற்றிலுள்ள சம்பவங்கள் ஏதாவது ஒன்றாவது எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் உண்டு. ஏனெனில் இவை அந்த அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட சம்பவங்களுடன் கதைகளாக எடுத்து வரப்பட்டுள்ள பதிவுகள்.

இவற்றின் பெறுமதி இன்னும் சில வருடங்களின் பின்னால் புலம்பெயர்ந்து வாழும் தமிழினத்தின் அடிவேரை ஆராய முற்படுவோருக்கு வெகுமதியாக தெரியும். யதார்த்தத்தை படைக்கும் எழுத்துக்கள்தான் வருங்காலத்தில் எமது அடையாளங்களைப் பகிரப் போகும் ஆவணங்கள். ஆகவே, இத்தகைய யதார்த்தத்துடன் கூடிய எமது வாழ்வியல் இலக்கியங்களை வரவேற்று ஊக்குவிப்பதன் மூலம், எமது வருக்காலத் தலைமுறைக்கும் அவர்களது அடையாளம் என்ன என்பதை விட்டுச்செல்லும் மகோன்னதப் பணிக்கும் வழிகோல முடியும்.

இராஜன் முருகவேல்
Wednesday, 14 May 2008

தமிழமுதம்

Friday, March 7, 2008

Thaya

Hi ......

First of all, I want to thank you for Manaosai. I have nearly finished reading it and I thought I let you know so far I am very pleased with it. I must tell you I am very stunned by the cover. Sure you know I show interest to a book by its cover and this cover is a very appealing one.

It's very difficult to decide whether the artistically work of your Dad (Munaa) compliments the writing of your Mum (Chandravathanaa) or the other way. Whichever way it is, I must confess I am delighted to see a couple with talents complimenting each other's work, exist in our community too.

You can probably hand-pick the Tamil books with covers which attract you from the first view. And Manaosai is definitely one of them. My wife is not a big fan of Tamil books, but when she saw the book on my night-table she could not resist it and now also reads it. She also was very amazed by the fact that a Tamil book could have so much character to it even before starting to read it. We now discuss each story and I was stunned to realize how different our views are and we came to a conclusion that a man sees the story at a totally different angle than a woman. My wife also quoted that this book is very easy to read and relate to. I must agree with her, it's a very realistic book where you can just go inside the characters.

Both the artists work is excellent. What a combination of a couple and well done on the production of Manaosai to both of them. And can you please let me know where I can get two more copies of Manaosai as my colleagues are interest too.

Thank you,
With regards,
A.Dhaya

Date: Thu, 6 Mar 2008 11:06:23 +0000

Theepa

I also have few things to write about the book 'Manaosai':

As a mum of two toddlers and studying for my masters I have not yet got around to finish the book yet. But every time I walk pass my book shelves that book stands out to me. In my opinion the cover of the book is one of the most catching covers I have seen. Even before starting to read the book, I somehow felt a connection to the book as a woman. I know this book is not just aimed to one type of party but the cover somehow made me relate myself to it and I wanted to know what's inside.

With some of my non-Tamil friends I have had very interesting conversations about the cover. We all agreed that it's a very catching cover and gave us hours of interesting debates. And this all without even reading the book. Just looking at the cover it lets you wonder off into imagination of what it could all be about.

So far what I have read has met up with my expectations and more. This book is very interesting because there is a story for everyone. Any type of person can find a story in there which he/she can relate themselves to it. Is a very down-to-earth book. It is written interestingly and well which makes you want to keep going more. I do not know if it was written on purpose or unknowingly but I feel each of the stories seem to have a message hidden in it. So after reading each story I analyse what the message could be in that particular story and it gives me and my friends a very good topic to discuss about over coffee. It's very interesting because each of us seem to see something different in it.

Additionally, not just the cover, but also the headings set of the imaginations to what it could be. Especially, my non-Tamil speaking friends are very impressed with the headings apparently because it sets their imaginations lose and it makes them want to know what the story is about. So with the assistant of a literature professor at my university, who also is very interested in knowing about this book, we are considering of translating this book.

Theepa
Wed, Mar 5, 2008 at 2:58 PM

நாகி - பிரான்ஸ்

இனிய சகோதரி,

உங்கள் மனவோசையை வாசிக்கத் தொடங்கி, இதுவரை என்னால் இருபது பதிவுகளைத்தான் வாசிக்க முடிந்தது( வேறு சில பணிகள் காரணமாக நேற்றுதான் தொடங்கினேன்). இன்றைக்கு அநேகமாக முடித்து விடுவேன்.

இவைகள் வெறும் கதைகளல்ல என்னைச் சுற்றியுள்ள யதார்த்தங்கள் என்று முதலிலேயே சொல்லி விடுகிறீர்கள், புனைவுகளும் உண்மைசார்ந்ததாக இருக்கிற போதுதான் அவைகளுக்கு விமோசனம் கிடைக்கின்றன. அதனாற்தானோ என்னவோ பல நேரங்களில் எது நிஜம் எது நிழலென்கிற சிக்கலிலிருந்து மீள முடியாமற் செய்து விடுகிறது.

புலம்பெயருகிற போதே சோதனைகள் தொடங்கி விடுகின்றன (சொல்லிச் சென்றவள் நல்ல உதாரணம்) புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பெண்கள் தரப்பு அவலஙளை இவ்வளவு ஆழமாக வாசித்ததில்லையென்றே சொல்ல வேண்டும். நல்ல கண்வன்மார்களும் ஜெர்மனியில் இருப்பார்களே கண்ணிற் படவில்லையா, சந்துரு,மரியதாஸ், சங்கர், மாதவன், சேகரென்று நிறைய வில்லன்கள் வருகிறார்கள். அத்தனையும் உண்மையா?

ஊர் நினைவுகளிலிருந்தும் மீளாமல் இருக்கிறீகள் என்பது நூல் நெடுகிலும் தெரிகிறது. ஜெர்மனீய அனுபவஙளில் இல்லாதா சோகம் ஊர் நினைவுகளில் அதிகமாக வெளிப் பட்டிருக்கிறது, வாசிப்பவர்களும் உணரமுடியும்.

படித்தவற்றுள் "பயணம், கணேஷ்மாமா, அக்கரைபச்சை, தீர்க்க தரிசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. வாழ்த்துக்கள்.

நாகி
பிரான்ஸ்
Tue, Feb 26, 2008 at 9:23 AM

Thursday, March 6, 2008

கரு வைகுந்தன்

சந்திரவதனாவின் மனஓசை கைக்குக் கிட்டியது.

வியர்க்க வியர்க்க ஓடியாடி விளையாடி விட்டு மாமரத்தில் கட்டித் தொங்க விட்டிருக்கும் ஊஞ்சலைக் கண்டு நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு, அதில் ஏறி ஆடும் போது காற்றுக்கு வியர்வை காய உடலில் ஒரு குளிர்ச்சி ஏற்பட்டு சில்லிட வைக்குமே அந்த உணர்வு இவரது சிறுகதைத் தொகுப்பைப் பார்த்ததும் வந்து போனது. கண்களில் எடுத்து அப்படியே ஒற்றிக் கொள்ளலாம் என்கின்ற வகையில் வர்ணத் தெரிவு அமைந்திருக்கிறது. அந்த ஊஞ்சலில் ஆடும் பெண் மனதுக்குள் பட்டாம் பூச்சிகளை சிறகடிக்க வைக்கிறாள். இப்படி இனிய நினைவுகளை ஏற்படுத்தி புத்தகத்துக்குள் நுளைய விட்டு நினைவு ஊஞ்சலில் எங்களை இருத்தி சந்திரவதனா மனஓசையை மெதுவாக சொல்லித் தருகிறார்.

முப்பது கதைகளை மனஓசையில் பதிந்திருக்கிறார். பொட்டு கிளாசில் தேனீரோடு வந்து வரவேற்கிறார். பதியப்படாத பதிவுகளோடு விடை கொடுக்கிறார். கதைகள் யாவும் தன்னைச் சுற்றி நடந்தவைகளே என்று ஆரம்பத்தில் இவர் குறிப்பிட்டிருப்பதால், நினைவுக் குறிப்பா, சிறுகதைத் தொகுப்பா என அதிகம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாமல் போய் விடுகிறது. சிறுகதைகளை சிறிய ஓவியங்கள் மூலம் பிரித்துக் காட்டி ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் ஆவலோடு அழைத்துச் செல்கிறார்.

தங்களைச் சுற்றி நடப்பவையை கருவாகக் கொண்டு தங்கள் கற்பனையையும் சேர்த்து கதைகளைப் படைக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், கற்பனைகளைக் கலக்காமல், தனது உணர்வுகளை அப்படியே எழுத்திலே தந்திருப்பதால், இவரது சிறுகதைப் பாத்திரங்கள் உயிரோடு எங்களது கண் முன்னால் நடமாடுவது போன்ற பிரமை ஏற்படுகிறது.

புலம் பெயர்ந்து வந்து சொந்தங்களை தொலைத்தவர்களின் சோகங்களுக்கும், தாய் நாட்டில் இருந்தவற்றை பறிகொடுத்து அதை தற்பொழுது வாழும் நாட்டில் தேடி அலையும் உறவுகளுக்கும் இந்த மனஓசையில் அதிகம் இடம் ஒதுக்கித் தந்திருக்கிறார். தனது சோகங்களையும், இயலாமைகளையும் எழுத்திலே தந்து தந்தையின் பாசத்திலும், தாயின் அணைப்பிலும், தம்பி, தங்கையின் அன்பிலும், மாமாவின் பரிவிலும், நண்பர்களின் நட்பிலும் இணைந்து பழைய நினைவுகளில் வாழ்ந்து பார்க்கிறார்; அத்தோடு எங்களது பழைய வாழ்க்கையையும் மீட்டிப் பார்க்க வைக்கிறார். அந்த வகையில் இந்த மனஓசை சக்தி வாய்ந்த ஓசைதான்.

நிலம், புலம் என்று இரு வெவ்வேறு தளங்களில் இருந்து தனது மனஓசையை தந்திருக்கிறார். ஊன்றிப் பார்க்கும் போது பெண்கள் சம்பந்தமான விடயங்களே இவரது கண்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கிறது. வசந்தம் காணா வாலிபங்கள் என்ற சிறுகதை தவிர அநேகமானவை பெண்களையும் இவரையும் (இவரும் பெண்தானே) சார்ந்ததாகவுமே புத்தகத்தில் காணமுடிகிறது. இடையிடையே மாவீரரான இவரது தம்பி மொறிஸ், கணேஸ்மாமா, வெள்ளை, ரவி என சிலர் வந்து போனாலும் தனது குடும்பப் பாசத்துக்கு முதலிடத்தையும், பெண்கள் பிரச்சினைகளுக்கு இரண்டாவது இடத்தையும், போனால் போகட்டும் என்று ஆண்களுக்கு வசந்தம் காணா வாலிபங்கள் என ஒரு சிறுகதை என்ற ஒரு இடத்தையும் தந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

புலத்தைத் தளமாகக் கொண்டு இவர் எழுதிய சிறுகதைகளில் ஆண்களை அநேகமான இடங்களில் கொடுமைக்காரர்களாகக் காட்டியிருப்பது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அவர்களும் தாய் சகோதரர்கள் எனப் பலதையும் தொலைத்தவர்கள்தானே? அவர்களின் ஆதங்கத்தை யார் எழுதப் போகிறார்கள்?

பருத்தித்துறை, ஆத்தியடி, பொலிகண்டி, நெல்லண்டை, வவுனியா, குருமன்காடு நாகொலகம, கொழும்பு, ரஸ்யா, ஜேர்மனி, கனடா என பலதரப்பட்ட இடங்களுக்கு இவரது சிறுகதைகள் எங்களை அழைத்துச் செல்கின்றன. நாங்களும் அந்த இடங்களில் இருந்து அந்த சம்பவங்களைப் பார்த்து விட்டு வந்தது போன்ற ஒரு எண்ணத்தை இவரது எழுத்துக்கள் தருகின்றன.

ஆறிலிருந்து அறுபது வரை என்பர்hகள். இவர் நாலில் இருந்து நாற்பது வயது வரை தந்திருக்கிறார் என நினைக்கிறேன். ஆக மனஓசை இரண்டாம்; பாகம் வர வாய்ப்பிருப்பது தெரிகிறது. எழுத்தும், அதனூடான எனது கருத்துக்களும் தொடரும் என்று பின் அட்டையில் சந்திரவதனா கண் சிமிட்டிச் சிரிக்கின்றார். தொடருங்கள். வாழ்த்துகள்

கரு வைகுந்தன்
மலேசியா
Fri, Feb 15, 2008 at 7:14 AM

தெ.நித்தியகீர்த்தி

மனஓசையை கேட்க முடிந்தது.

கதைகள் ஒவ்வொன்றும் பலவிதமான உணர்வுகளோடு யதார்த்தமாகவும், நெஞ்சைத் தொடும் வகையிலும் எழுதப் பட்டிருந்தன. பொட்டு கிளாசில் ஆரம்பித்த போதை கடைசிப் பக்கம் வரை படிக்க வைத்தது.

புத்தகம் அழகாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அட்டைப் படம் மௌனமாக மனஓசையை ஒலிக்கின்றது. ஆடுவது ஊஞ்சலா மனமா? நிழலாடுவது இராணுவத்தின் தலையா? தேர்ந்தெடுத்த வர்ணம் குளிர்மையானது.

கதையில் சந்திரவதனாவின் முத்திரை. தலைப்பில் மூனாவின் சித்திரம். எழுத்துகளும் படமும் படிக்கத் தூண்டுகின்றன.

மொரிசின் கதை, தந்தையைப் பார்க்கச் சென்ற கதை, நாட்டை விட்டுப் புறப்பட்ட கதை மனதை உறுத்தின. பெண்ணுரிமைக் குரலும், துயரக் குரலும் சேர்ந்து ஒலிக்கின்றன.

எழுத்துலகில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.

தெ.நித்தியகீர்த்தி
Dienstag, den 12. Februar 2008, 11:33:06 Uhr